கோவை,ஜன.5: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்றும் நீடிக்க வாய்ப்புள்ளது என வேளாண் பல்கலைகழகம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை உக்கடம், காந்திபுரம், சுந்தராபுரம், துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கண்பாளையம், பீளமேடு, சிங்காநல்லூர், டவுன்ஹால், செல்வபுரம், சுங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மிகவும் குளிரான நிலையே காணப்படுகிறது. வாகன ஒட்டிகள் மழையில் வாகனத்தை இயக்குவதால் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.கோவை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழை வடகிழக்கு பருவமழை தான்.
கடந்த அக்டோபர் மாதம் துவங்கி தற்போது வரை வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு சராசரியாக 315 மி.மீ. வரை வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறுகையில், ‘‘ கோவையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை, வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தான். வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவடையவில்லை. நாளையும் (அதாவது இன்றும்) கோவை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது ,’’ என்றார்.