×

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம்

திருச்சி, ஜன.5: திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான கடந்த மாதம் 25ம் தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் 10ம் நாளான நேற்றுமுன்தினம் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியான உற்சவர் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நேற்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை நடந்தது.

நம்மாழ்வார்மோட்சம் நிகழ்ச்சியையொட்டி, பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் பக்தர் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிரு நாமமும், துளசி மாலையும் தரித்து காட்சியளித்தார். நம்மாழ்வாரை அச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றிபடும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர். நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர். பல்வேறு வேதங்களை சொல்லியபடி நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர். அதனைத்தொடர்ந்து நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை தூக்கி காண்பித்து மோட்சம் அடைந்ததாக தெரிவித்தனர்.

அப்போது நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசிமாலையும் அணிவிக்கப்பட்டது. காலை 8 மணி முதல் காலை 9 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார். காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியில் கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்களின்றி கோயில் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றனர். தொடர்ந்து நேற்று இரவு 8.30 மணிமுதல் 9 மணிவரை மூலஸ்தானத்தில் இயற்பாபிரபந்தம் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் இன்று (5ம்தேதி) அதிகாலை 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடந்தது. அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணிவரை சாற்றுமறை நடந்தது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது.


விழாவிற்கான ஏற்பாடுகளை ரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.ரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 14ம் தேதியுடன் துவங்கிய நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து சென்றனர். இதையடுத்து நேற்றுடன் விழா முடிந்த நிலையில் மூலஸ்தானம் முதல் கோயில் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. ஏர்போர்ட் அருகே ஆக்கிரமிப்பில் இருந்து கோயிலை அகற்ற ஒரு பெண் எதிர்ப்பு தெரிவித்து கோயில் உள்ளே சென்று சாமி சிலையை கட்டிப்பிடித்து கொண்டார். அவரை பெண் போலீசார் குண்டு கட்டாக கட்டி வெளியே அப்புறப்படுத்தினர்.

Tags : Nammazhvar Motsam ,Aurangam Ranganathar Temple ,
× RELATED ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் கோடைதிருநாள் துவக்கம்