தரங்கம்பாடி, ஜன. 5: திருக்கடையூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு எம்எல்ஏ வர தாமதமானதால் பொதுமக்கள் கூச்சலிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள கூட்டுறவு அங்காடியில் நேற்று காலை 10 மணிக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் டோக்கன் பெற்றவர்கள் காலை 10 மணிக்கு அங்காடிக்கு வந்தனர். ஆனால் எடுத்துகட்டி, இலுப்பூர், மேமாத்தூர், தில்லையாடி உள்ளிட்ட ஊர்களில் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கி விட்டு பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் பொறுமை இழந்து கூச்சலிட துவங்கினர். இதனால் அங்காடி ஊழியர்கள், அங்கிருந்த கூட்டுறவு வங்கி நிர்வாகிகளை கொண்டு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினர். அதன்பிறகு அங்கு வந்த எம்எல்ஏ பவுன்ராஜ், பொதுமக்களுக்கு பரிசு பரி்சு தொகுப்புகளை வழங்கினார்.