கொள்ளிடம், ஜன. 5: கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் டிரைவர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பனங்காட்டான்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் ஏற்றி கொண்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் மற்றும் போலீசார் நேற்று பனங்காட்டான் குடியிலிருந்து கொண்டல் செல்லும் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்தபோது கொள்ளிடத்திலிருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை ஓட்டி வந்த கொண்டல் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த முருகபாண்டியனை (24) கைது செய்தனர். மேலும் மணலுடன் டிராக்டர் மற்றும் ட்ரெய்லரை பறிமுதல் செய்தனர்.