×

மயிலாடியில் பரபரப்பு மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கொள்ளை

அஞ்சுகிராமம், ஜன.5: மயிலாடியில் உள்ள மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கதவை உடைத்து உண்டியல்களில் இருந்த பணத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். குமரிமாவட்டம் மயிலாடி சந்திப்பில் மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இங்கு பங்கு பேரவை துணைத் தலைவராக ராஜ்குமார் (37) இருந்து வருகிறார். ஆலயத்தின் மேல் பகுதியில் பங்குத்தந்தை இல்லம் இருக்கிறது. நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் பங்குதந்தை ஆலயத்தை பூட்டி விட்டு அவரது இல்லத்திற்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை சுமார் 5 மணிக்கு மணி அடிப்பதற்காக ஆலய உபதேசியார் வந்து பார்த்தார்.  அப்போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தார். அப்போது 2 உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

மாதா சொரூபத்தில் அணிந்திருந்த தங்க முலாம் பூசிய தராசும் திருடப்பட்டு இருந்தது. இந்த தகவலை பங்கு தந்தையிடம் கூற சென்றார். அப்போது பங்கு தந்தை வீட்டு கதவை கொள்ளையர்கள் வெளிப்புறமாக பூட்டி விட்டு சென்றிருப்பது தெரியவந்தது. இதுபற்றி பங்கு பேரவை துணைத் தலைவர் ராஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு வந்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். தனிப்படை போலீசாரும் விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ஆலய உண்டியலில் இருந்து சுமார் R 25 ஆயிரம் திருடப்பட்டு இருக்கலாம் என்று நிர்வாகிகள் கூறினர். கொள்ளையர்களை அடையாளம் காணும் வகையில் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Robbery ,Michael Archangel Temple ,Myladi ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...