×

திண்டிவனம் அருகே பரபரப்பு மிக்ஸர் மிஷின் வாகனம் மோதி மின்கம்பம் முறிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 16 பெண்கள்

திண்டிவனம், ஜன. 5: திண்டிவனம் அருகே மிக்ஸர் மிஷின் வாகனம் மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதில் 16 பெண் ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பம் கிராமத்தில் அங்கன்வாடி தெருவில் சேகர் என்பவர் வீடு கட்டி வருகிறார். அவரது வீட்டிற்கு ஜல்லி போடுவதற்காக மிக்ஸர் மிஷின் வாகனம் வந்தது. இந்த வாகனத்தை இழுத்து வந்த மினி வேனில் வட சிறுவலூர் கிராமத்தை சேர்ந்த பெண் கூலித்தொழிலாளர்கள் 16 பேர் வந்தனர். மினிவேனை வெள்ளிமேடுபேட்டையை சேர்ந்த சேகர் மகன் மணிவண்ணன்(28) ஓட்டி வந்தார்.அப்போது வழிமாறி சுடுகாட்டு பாதையில் வாகனம் சென்றது. உடனே வழிமாறி வந்ததை அறிந்த ஓட்டுநர் மினிவேனை திருப்பிக்கொண்டு அதே சாலையில் வரும்போது மிக்ஸர் மிஷின் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் முறிந்து மினிவேன் மீது விழுந்தது. இதை பார்த்த 16 பெண் ஊழியர்களும் அலறியடித்துக்கொண்டு மினிவேனில் இருந்து கீழே குதித்தனர். இதுகுறித்து அங்கிருந்த இளைஞர்கள் கொள்ளார் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்தனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய உதவி பொறியாளர் சண்முகம் மற்றும் ஊழியர்கள் மின்கம்பம் மற்றும் மின் ஒயர்களை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் 16 பெண் ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : women ,collision ,Tindivanam ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது