சேந்தமங்கலம், ஜன.4: சேந்தமங்கலம் அடுத்துள்ள பச்சுடையாம்பட்டியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(45), லாரி டிரைவர். இவரது தாயார் மூக்காயி(65), நேற்று அதே பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மதுகிசான் (24) என்பவர், போதையில் மூக்காயிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், மதுகிசான் மூக்காயியை ஆடு மேய்க்கும் தடியால், சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து சேந்தமங்கலம் எஸ்ஐ சந்திரன் வழக்குப்பதிவு செய்து மதுகிசானை கைது செய்து விசாரிக்கிறார்.