×

ராஜபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி

ராஜபாளையம், ஜன.4: ராஜபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாயும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முத்துசாமியாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காமராஜர் குடியிருப்பு பகுதியில் ஏற்படும் கழிவுநீர் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையில் பாய்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து மக்கள் கூறுகையில், காமராஜர் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருகின்றன. கழிவுநீர் வாய்க்கால் வசதி எதுவும் இல்லை. எனவே குடியிருப்பு பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேங்கி வருகிறது. இப்பகுதியில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் கழிவுநீரில் கடந்து செல்லக்கூடிய சூழ்நிலையில் இருந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. பல நேரங்களில் விபத்து ஏற்படும் சூழல் இருந்து வருகிறது. இப்பகுதியை கடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து பலமுறை அரசு அலுவலகங்களிலும் தேசிய நெடுஞ்சாலை துறையிடமும் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. எனவே சாலையில் கழிவுநீர் விடுவதை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என கோரிக்கை வைத்தனர்.

Tags : Sewage motorists ,National Highway ,Rajapalayam ,
× RELATED சென்னை- பெங்களூரு தேசிய...