வருசநாடு, ஜன. 4: தேனி மாவட்டம், மயிலாடும்பாறையில் தாலுகா அலுவலகம், வேளாண் அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகின்றன. இதில் தீயணைப்பு நிலையம் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இக்கட்டிடத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால், கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை மெயின் ரோட்டில் தீயணைப்பு நிலையம் கட்ட சுமார் 54 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில், மூலக்கடை-மயிலாடும்பாறை ரோட்டில் 1.96 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தீயணைப்பு நிலையம், தாலுகா அலுவலகம், வேளாண் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து மயிலாடும்பாறை ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி அன்பில்சுந்தரபாரதம் கூறுகையில், ‘மயிலாடும்பாறையில் செயல்பட்டு வரும் தீயணைப்புத்துறை அலுவலகத்துக்கு, புதிய கட்டிடம் கட்டுவதற்கு கடமலைக்குண்டு ஊராட்சியில் புதிய இடம் தேர்வு செய்துள்ளனர். இதனால், ஊர் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இங்கு, செயல்பட்டு வரும் அரசு அலுவலகங்களுக்கு, மயிலாடும்பாறை ஊராட்சி நிர்வாகம் தேர்வு செய்யும் இடத்தில் கட்டிடம் கட்ட வேண்டும்’ என்றார்.