×

நங்கவரம் பேரூராட்சி நச்சலூர் பள்ளியில் மேல்நிலைக்கல்வி தொடங்க வேண்டும் பெற்றோர்கள் கோரிக்கை

குளித்தலை, ஜன.4: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்துள்ள நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட நச்சலூர் பகுதியில் நச்சலூர் புரசம்பட்டி ஆண்டிப்பட்டி நல்லூர் ஓம்தாம்பட்டி சொட்டல் மாடு விழுந்தான் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் நச்சலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர் மேலும் சுற்றி உள்ள நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஒன்பதாம் வகுப்புக்கு நச்சலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நச்சலூர் சுற்றியுள்ள பகுதி வயல் விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதால் மேல்நிலைப்பள்ளிக்கு செல்வதற்கு மாணவிகள் அச்சமடைந்து அருகிலுள்ள இனுங்கூர், நெய்தலூர், குளித்தலை, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அப்படியே செல்ல வேண்டுமென்றால் இப்பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து என்பது கடினமான ஒன்றாக இருந்து வருகிறது. அதனால் கிராமப்புறமாணவிகள் உயர்நிலைக் கல்வி முடித்து விட்டு மேல்நிலைக்கல்விக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் கிராமப்புற மாணவ, மாணவிகள் நலன் கருதி நச்சலூர் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு மேல்நிலைக்கல்வி தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Parents ,Nachchaloor School ,Nangavaram Municipality ,
× RELATED பேரணி மூலம் பெற்றோர்களுக்கு...