கரூர், ஜன. 4: கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்புறம் ராமகிருஷ்ணபுரம், செங்குந்தபுரம் போன்ற ஜவுளி நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதிக்கு சாலை உள்ளது.இந்த சாலையின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பு பணிகளுக்கான பள்ளம் தோண்டப்பட்டு, அவை சரிவர மூடப்படவில்லை.
இதன் காரணமாக சாலை குண்டும் குழியுமாகவும், ஜல்லிக்கற்கள் பரவிய நிலையில் சாலை உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைத்து அனைவரும் எளிதாக செல்லும் வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.