×

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமங்களிலும் வாரச்சந்தை நடத்த நடவடிக்கை வேண்டும்

புதுக்கோட்டை, ஜன.1: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு சிறு நகரங்களில் நடக்கும் வாரச்சந்தைகள் போல் கிராமங்களிலும் வாரச்சந்தைகள் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில் வாரச்சந்தைகள் ஆரம்பிக்கபப்பட்டு நல்ல முறையில் இயங்கி வருகிறது. குறிப்பாக இலுப்பூர், நார்த்தாமலை, முத்துடையம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களில் வாரச்சந்தைகள் இயங்கி வருகிறது. இந்த வாரச்சந்தைகள் வாரத்திற்கு ஒரு நாள் மாலை தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. இந்த சந்தையில் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள், கீரைகள், மீன்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் மொத்தமாகவும், சில்லரையாகவும் கிடைக்கிறது.

இந்த சந்தைகளுக்கு விவசாயிகள் தங்கள் வயல்களில் விளையும் காய்கறிகள், அதேபோல் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பெரும் நகரங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் தங்கள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள நகரங்ளில் நடக்கும் வாரச்சந்தைகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். தினசரி மார்கெட்டில் ரூ.500க்கு வாங்கும் பொருட்களை வாரச்சந்தையில் வாங்கினால் ரூ.300 போதும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சில வாரச்சந்தைகள் திருவிழா போல் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சில இடங்களில் போலீசார் பாதுகாப்பு அளிக்கின்றனர். சில இடங்களில் போலீசார் பாதுகாப்பு அளிப்பதில்லை. இந்த வாரச்சந்தைகளை உள்ளாட்சி நிர்வாகம் கிராமங்களுக்கு விரிவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pudukkottai district ,villages ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...