×

விருதுநகர் அரசு மருத்துவமனையில் வீணாக கிடக்கும் பேட்டரி வாகனங்கள் 6 மாதங்களாக நோயாளிகள் அவதி

விருதுநகர், ஜன. 1:  விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பொது மருத்துவப்பிரிவுக்கும், மகப்பேறு மருத்துவப்பிரிவுக்கும் நடுவில் போக்குவரத்து நிறைந்த ராமமூர்த்தி ரோடு உள்ளது. மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவப்பிரிவில் இருந்து கர்ப்பிணிகள் ரத்த பரிசோதனை, ஸ்கேன், எக்ஸ்ரே எடுப்பதற்கு ரோட்டை கடந்து பொது மருத்துவப்பிரிவுக்கு வர வேண்டும். ரோட்டை கடக்கும் போது விபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது. இதனால் ராமமூர்த்தி ரோட்டில் தரைப்பாலம் கட்ட வேண்டுமென்ற கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் தலா ரூ.5லட்சம் மதிப்பில் இரு பேட்டரி கார்கள் வாங்கப்பட்டன. இந்த பேட்டரி கார்களில் கர்ப்பிணிகள், நோயாளிகள், உறவினர்கள் ஏறி, இறங்கி சென்று வந்தனர். இந்நிலையில் பேட்டரி கார் கடந்த 6 மாதங்களாக பழுதாகி சரி செய்யாமல் நிறுத்தப்பட்டுள்ளது. பேட்டரி கார் இயங்காததால் காலவாதியான பழைய ஆம்புலன்சில் நோயாளிகள், உறவினர்களை ஏற்றி செல்கின்றனர். பயன்பாட்டிற்கு தகுதியற்ற ஒரு வாகனத்தில் நோயாளிகள், கர்ப்பிணிகளை ஏற்றி செல்வதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மநீம கட்சி மாவட்ட செயலாளர் காளிதாஸ் கூறுகையில், பேட்டரி கார்கள் 6 மாதங்களுக்கு முன்பே பழுதாகி விட்டன. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப்பணிகள் நடப்பதால் மருத்துவமனை வளாகமும், மல்லாங்கிணர் ரோடும் சேறும், சகதியாக இருக்கிறது. இந்நிலையில் தான் பேட்டரி கார்களை நோயாளிகளுக்கு ஸ்கேன், எக்ஸ்ரே, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்கு சென்று வர பயன் உள்ளதாக இருக்கும். ஆனால் பழுதாகி நிற்கும் இரு பேட்டரி கார்களையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் காலவதியான பராமரிப்பு இல்லாத, சுகாதாரமற்ற வாகனத்தில் அழைத்து செல்கின்றனர். பேட்டரி கார்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர மருத்துவப்பணிகள் இணை இயக்குநருக்கு மனு அளித்திருப்பதாக தெரிவித்தார்.

Tags : Virudhunagar Government Hospital ,
× RELATED ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற...