ஊட்டி, ஜன. 1: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல கோடி செலவில் அமைக்கப்பட்ட அலங்கார தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில், பல இடங்களில் விளக்குகள் காணாமல் போயுள்ளன. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரூ.பல கோடி மதிப்பில் தெரு விளக்குகள் மற்றும் பொது கழிவறைகள் கட்டப்பட்டன. நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் சாலையோரங்களில் அலங்கார தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன. குறிப்பாக, நகரின் அனைத்து பகுதிகளிலும் இந்த தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்த தெரு விளக்குகளை முறையாக பராமரிக்காமல் நகராட்சி நிர்வாகம் விட்டுவிட்டது. இதனால், பல இடங்களில பொருத்தப்பட்டுள்ள இந்த தெரு விளக்குகள் எரிவதில்லை. பெரும்பாலான இடங்களில் கம்பங்கள் மட்டுமே உள்ளது. அதில் பொருத்தப்பட்டிருந்த அலங்கார விளக்குகள் மற்றும் கண்ணாடி கூண்டுகள் போன்றவை ருடப்பட்டுள்ளன. குறிப்பாக, சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் ரோஜா பூங்கா சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகளில் ஒன்று கூட எரிவதில்லை. மேலும், சாலையோரங்களில் கம்பங்கள் மட்டுமே காட்சியளிக்கிறது. அதில் விளக்குகள் ஏதும் இல்லை. மேலும், அவைகளின் ஒயர்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால், இந்த கம்பங்களை தொடும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.