×

மாவட்டத்தில் 11887 பேர் குரூப் 1 தேர்வு எழுதுகின்றனர்


கோவை, ஜன.1: மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் வரும் 3ம் தேதி குரூப் 1 தேர்வுகள் நடக்க உள்ளது. 24 தேர்வு மையங்களில் உள்ள 40 தேர்வுக்கூடங்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 11,887 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், இத்தேர்வு சிறப்பாக நடத்திடும் பொருட்டு 9 மொபைல் அலுவலர்கள், 4 தேர்வுக்கூட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் துணை கலெக்டர் நிலையில் 5 பறக்கும்படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களுக்கும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட்டு தேர்வுக்கூடங்களுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்வர்கள் காலை 9.15 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்கு சென்றடைய வேண்டும். காலை 9.15 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்கள் யாரும் தேர்வுக்கூடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்து இணையவழியாக தேர்வு நுழைவுசீட்டினை பதிவிறக்கம் செய்து தேர்வு நடைபெறுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக தேர்வு மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் ராஜாமணி கூறியுள்ளார்

Tags : district ,Group 1 ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்