மன்னார்குடி, டிச.31: மன்னார்குடி, கோட்டூர் வட்டாரங்களில் பள்ளிகளில் வேலை பார்க்கும் சத் துணவு அமைப்பாளர்களுக்கான உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம் மன்னார்குடியில் நடைபெற்றது. சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் மன்னார்குடி, கோட்டூர் வட்டாரங்களில் பணியாற்றும் பள்ளி சத்துணவு அமைப்பாளர்களுக்கான உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் சேரன்குளம் மனோகரன் தலைமை வகித்து பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உஷாராணி (வட்டார வளர்ச்சி ), பக்கிரிசாமி (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பங்கேற்ற சத்துணவுத்திட்ட அமைப்பாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு பரிந்துரைகள், சுகாதாரமான முறையில் உணவு சமைப்பது, உணவு மற்றும் உலர் உணவுப்பொருட்களை வழங்குவது, தீ விபத்து ஏற்படாத வண் ணம் பணிபுரிவது, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் மன அழுத்தத்தை தடுப்பது தொடர்பாக தஞ்சை தேசிய உணவு பதனீட்டுக் கழகம் பயிற்சியாளர் கார்த்திகேயன், தொழில் நுட்ப அலுவலர் சரவணன், தொழில்நுட்ப உதவியாளர் ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலும், பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் உணவு பாதுகாப்பு பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டது. முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவ லர் இலரா வரவேற்றார். சத்துணவுப்பிரிவு உதவியாளர் மீனாட்சி நன்றி கூறினார்.