திண்டுக்கல், டிச. 31: திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை நேற்று மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சிஐடியு சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சங்க செயலாளர் முருகேசன் தலைமை வகிக்க, தலைவர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் வாகனங்களுக்கான ஒளி பிரதிபலிப்பு பட்டை, வாகன புகை சான்று, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதற்கு கூடுதல் கட்டணம் வாங்க கூடாது, வேக கட்டுப்பாட்டு கருவியை புதிதாக மாற்ற கட்டாயப்படுத்த கூடாது, வாகன உரிமையாளர்களை அலைக்கழிக்காமல் தகுதிச்சான்று வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேசிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.