தர்மபுரி, டிச.31: தர்மபுரியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் அரிசி, பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் சரியாக வழங்கவில்லை என்று பொதுமக்கள் திமுக எம்எல்ஏ தடங்கம் சுப்ரமணியடத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து எம்எல்ஏ 13 வது வார்டு எம்ஜிஆர்நகர் மற்றும் இலக்கியம்பட்டி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் திடீரென ஆய்வு செய்தார். ஆய்வின்போது, அரிசி சரியாக வழங்குவதில்லை. அரசு வழங்கவுள்ள பொங்கல் தொகுப்பு ₹2500யுடன் பரிசுத்தொகை பெற டோக்கன் கொடுக்க வில்லை என புகார் தெரிவித்தனர்.
விற்பனையாளரிடம், வட்ட வழங்கல் துறை அலுவலரிடம் எம்எல்ஏ தடங்கம் போனில் தொடர்புகொண்டு பொருட்கள் வழங்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்பின் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சோதனை செய்து, ஊழியர்களிடம் அறிவுரைகள் வழங்கி சென்றார். ஆய்வின்போது, தர்மபுரி திமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் தங்கமணி, ஒன்றிய குழு உறுப்பினர் மாங்கனி செல்வராஜ், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கவுதம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.