திருப்பூர், டிச.31: அவிநாசி புதுப்பாளையம் பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். அவிநாசியை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் ஏற்கனவே அரசு மதுக்கடை உள்ளது. அந்த மதுக்கடையால் அப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் நடமாட முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலும் ஒரு மதுக்கடை திறந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். ஆனால் மாவட்ட நிர்வாகம் கண்டும் காணாமல் இருப்பதாக கூறி நேற்று அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் மதுக்கடையை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.