×

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் அகற்றம்

கோவை, டிச.31:உக்கடம் மஜித் காலனியில் சுமார் 400 குடும்பத்தினர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருந்தனர். இவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோவைப்புதூர், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன. இவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டதும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. இதனிடையே மஜித்காலனியில் 2 அம்மன் கோவில்கள், மதுரை வீரன் கோவில், விநாயகர் கோவில், பள்ளிவாசல் ஆகிய வழிபாட்டு தலங்கள் இருந்தன. இந்த வழிபாட்டு தலங்கள் மட்டும் இடித்து அகற்றப்படாமல் இருந்து வந்தது. இதனிடையே மாநகராட்சி அதிகாரிகள், வழிபாட்டு தலங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் வழிபாட்டு தலங்களை இடித்து அகற்ற சம்மதம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ பள்ளி வாசல், கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை அகற்றுவது குறித்து நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வழிபாட்டு தலங்களை அகற்றும் பணி துவங்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து வழிபாட்டு தலங்களின் மேற்கூரைகள் அகற்றப்பட்டன. அடுத்து பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வழிபாட்டு தலங்கள் இடித்து அகற்றப்படும்’’ என்றனர்.

Tags : Removal ,places ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...