ஈரோடு, டிச.31:ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் நேற்று நடந்த ஆருத்ர தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தமிழ் மாதம் மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆருத்ர தரிசன விழாவாக சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் நேற்று காலை 6 மணிக்கு நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகத்துடன், பூமாலை மற்றும் நகைகளுடன் சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டது.
சிவகாமசுந்தரி உடனமர் நடராஜர் பெருமான் உள் பிரகாரம், வெளிப்பிரகாரத்தில் உலா வந்தார். இதையடுத்து, கோயில் வளாகத்தில் நடராஜர் பெருமான் மாணிக்கவாசகருடன் எழுந்தருளினார். பின்னர், ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளின் காரணமாக சுவாமி திருவீதி உலா ரத்து செய்யப்பட்டு, கோயில் வளாகத்திலேயே நடராஜரையும், மூலவரையும் வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த ஆருத்ர தரிசனத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நடராஜரை வழிபட்டு சென்றனர்.