×

மணப்பாறை அருகே சாலையில் வேன் கவிழ்ந்து 30 தொழிலாளர் படுகாயம்

மணப்பாறை, டிச.30: திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் மாவட்ட எல்லையான தங்கமாபட்டியில் வடமதுரை போலீசாரின் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக திருச்சி மாவட்ட எல்லை பகுதியான வையம்பட்டி, கருங்குளம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்களை திண்டுக்கல் பஞ்சாலைக்கு வேன்களில் ஏற்றிச்செல்வர். வழக்கம் போல் நேற்று அதிகாலை தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் மற்றொரு வேனை முந்திச் செல்ல முயன்றபோது நிலைதடுமாறி நடுவில் உள்ள தடுப்புக் கட்டையை தாண்டி அடுத்த ரோட்டில் கவிழ்ந்தது. இதில், வேன் டிரைவர் ஜீவா, அஞ்சம்மாள், மல்லிகா உட்பட 30 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். போலீஸ் சோதனைச் சாவடி அருகே சம்பவம் நடந்ததால் வடமதுரை போலீசார் சோதனைச்சாவடி பாதுகாப்பு பணியில் இருந்து விரைந்து வந்து காயம்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலை 3 மணிக்கு நடந்த இந்த விபத்தால் சிறிது நேரம் திண்டுக்கல்-திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : road ,Manapparai ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி