×

பெரம்பலூரில் மாயமான கார் திருச்சியில் மீட்பு கொள்ளையர்கள் பயன்படுத்தினரா என விசாரணை

 திருச்சி, டிச.30: பெரம்பலூரில் மாயமான கார் திருச்சியில் சிக்கியது. அதில் அரிவாள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பெரம்பலூர் மாவட்டம், டி.களத்தூரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கடந்த 2 நாட்களுக்கு முன் இவர் தனது காரை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நிறுத்தியிருந்த கார் மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஏற்கனவே போட்டோ எடுத்து வைத்திருந்த தனது காரின் படம் மற்றும் பதிவெண்ணை வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கார் குறித்து தகவல் தெரிந்தால் தகவல் அளிக்கவும் கூறியிருந்தார். இது சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது. மேலும் இது குறித்து பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்தோஷ்குமார் வாட்ஸ்அப்பிற்கு அவர் காரின் படம் மற்றும் இடம் குறித்து தகவல் வந்தது. அதில் மாயமான கார் பாலக்கரை கெம்ஸ்டவுன் பொது கழிப்பிடம் அருகே அனாதையாக நிற்பதாக பதிவிடப்பட்டிருந்தது. இது குறித்து சந்தோஷ்குமார் பாலக்கரை போலீசாருக்கு போனில் தெரிவித்ததால் பாலக்கரை போலீசார் அங்கு சென்று காரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். ேபாலீசார் அந்த காரை சோதனை செய்தபோது, அரிவாள், மரவேலைக்கு பயன்படுத்தும் உளி, ஸ்குருடிரைவர் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சந்தோஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கார் நின்ற பகுதிகளில் உள்ள கேமராக்களில் காரை கடத்திய நபர்கள் உருவம் பதிவாகியுள்ளதா என போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். காரில் ஆயுதங்கள் கிடந்ததால் கொள்ளையர்கள் யாரும் காரை திருடி கொள்ளைக்கு பயன்படுத்திவிட்டு விட்டு சென்றார்களா எனவும் விசாரித்து வருகின்றனர்.

Tags : Investigation ,rescue robbers ,Trichy ,Perambalur ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...