×

மொபட் மீது குடிநீர் லாரி மோதி தம்பி பலி, அண்ணன் காயம்

திருச்சி, டிச.30: திருச்சி சோமரசம்பேட்டை மேலபாப்பாக்குறிச்சியை சேர்ந்தவர் மதியழகன், கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உறையூர் மேலகல்நாயக்கன் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன்கள் மகேந்திரன், சசிக்குமார்(13). மதியழகன் நேற்று காலை மகன்களை இறைச்சி கடைக்கு அனுப்பி வைத்தார். இருவரும் மொபட்டில் கோழிக்கறி வாங்க சென்றனர். மகேந்திரன் மொபட்டை ஓட்டினார். சசிக்குமார் பின்னால் அமர்ந்திருந்தார்.
விக்டோரியா சாலையில் வந்தபோது எதிரே வந்த உறையூர் தனியார் மருத்துவமனைக்கு ெசாந்தமான குடிநீர் டேங்கர் லாரி, மொபட் மீது மோதியது.

இதில் கீழே விழுந்த சசிக்குமார் லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பலியானார். வலதுபுறம் விழுந்த மகேந்திரனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து அறிந்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சசிக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்த மகேந்திரனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து லாரி டிரைவர் உறையூர் சவேரியார் கோயில் தெருவை சேர்ந்த சகாயராஜ்(36) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : brother ,
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...