காரைக்கால்,டிச.30: திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் கைடு என கூறி பக்தர்களிடம் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் தேவஸ்தானம் அமைந்துள்ளது. பரிகார தலமான இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சனிக்கிழமைகள் தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் திருநள்ளாறு வருகின்றனர்.
இதனை பயன்படுத்திக் கொண்டு தாங்கள் கைடு எனக்கூறி பக்தர்களிடம் பணம் பறித்து ஏமாற்றி வருவதாக காரைக்கால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் திருநள்ளாறு பூமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்கிற சின்னப்பா, சங்கர் என்கிற இளங்கோவன் மற்றும் சுரேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து உள்ளனர். கைடு என்று கூறிக்கொண்டு பக்தர்களிடம் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது திருநள்ளாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.