திண்டுக்கல், டிச. 30: திண்டுக்கல்லில் வரலாற்று சிறப்பு வாய்ந்த மலைக்கோட்டை உள்ளது. தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோட்டைடையை தினசரி சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்த்து வருகின்றனர். மாதந்தோறும் பவுர்ணமியன்று இந்துக்கள் மலைக்கோட்டையைச் சுற்றி கிரிவலம் வருவது வழக்கம். இந்நிலையில், முஸ்லீம் அமைப்பினர் மலைக்கோட்டையில் தொழுகை நடத்த உரிமை கோரி வந்தனர். இதனால், அவ்வப்போது பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பௌர்ணமியான நேற்று சட்ட ஒழுங்கு பிரச்னையை தடுக்கும் வகையில், கலெக்டர் விஜயலட்சுமி, மலைக்கோட்டைக்கு செல்ல 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து மலைக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மலைக்கோட்டை நுழைவு வாயில் மற்றும் மலைக்கோட்டை மேல்பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மலைக்கோட்டையை பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.