×

செய்துங்கநல்லூரில் மூடிக்கிடக்கும் சித்த மருந்தகம் திறக்கப்படுமா?

செய்துங்கநல்லூர், டிச. 30:  செய்துங்கநல்லூரில் மூடிகிடக்கும் சித்த மருந்தகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென என பொதுமககள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் நகரமாகும். இவ்வூரின் சுற்றுபகுதியில் உள்ள 42க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கிறார்கள். இவர்கள் சந்தை, போஸ்ட் ஆபீஸ், மின்வாரிய அலுவலகம், பஸ், ரயில் நிலையம், ஒன்றிய அலுவலகம் உள்பட முக்கிய தேவைக்கு செய்துங்கநல்லூர் வந்து செல்ல வேண்டியுள்ளது. இங்கு ஏழை எளிய மக்கள் பயன்பெற அரசு மருத்துவமனை வசதி கிடையாது.

செய்துங்கநல்லூரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சித்த மருந்தகம் இயங்கியது. தினமும் மருத்துவர் வந்து சென்றதால் மக்கள் பயனடைந்தனர். தற்போது அந்த மருந்தகம் மூடிகிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, கடந்த 35 வருடங்களுக்கு முன்பு செய்துங்கநல்லூரில் சித்த மருந்தகம் இயங்கியது. கருங்குளம் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட பின்பு, அங்கு சித்தா பிரிவு இருந்தபோதும்கூட நோயாளிகள் செய்துங்கநல்லூரில் உள்ள சித்த மருந்தகத்துக்கு வந்து சென்றனர்.

இதற்கிடையில் கருங்குளம் யூனியன் அலுவலகத்தின் கீழ் இயங்கி வந்த சித்த மருந்தகத்தில் பணியாற்றிய டாக்டர் ஓய்வுபெற்ற பின்பு மாற்று டாக்டர் நியமிக்கப்படவில்லை. அதன்பின் மருந்தகர் ஒருவர் பணியாற்றி நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து வந்தார். அவரும் ஓய்வு பெற்றதும் மருத்துவமனையை மூடிவிட்டனர். இதனால் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனவே உடனடியாக செய்துங்கநல்லூர் சித்த மருந்தகத்தினை திறந்து டாக்டர் நியமிக்கவேண்டும் என்றனர்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...