×

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்த்தால் கடும் நடவடிக்கை

தூத்துக்குடி, டிச. 30: தூத்துக்குடி மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ்,  எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய பசுமை ஆணையம் தீர்ப்பாயத்தின் ஆணையின்படி வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.

ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் காற்று சுவாச மீன்களாகும். இம்மீன்கள் தொடர்ந்து இடைவிடாமல் மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. மேலும் 8 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியது. இதனால் இந்த மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்து விட்டால், அவற்றை அழிப்பது சாத்தியமில்லாத ஒன்று.

மேலும், இம்மீன்கள் மிகக்குறைந்த அளவு தண்ணீரிலும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவையாகும். இம்மீன்கள் நன்னீர் மீன் இனங்களையும், அதன் முட்டைகளையும் உணவாக்கி கொள்வதால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் நிலை உருவாகும். இந்த மீன்களை பண்ணைக் குட்டைகளிலோ அல்லது மீன் வளர்ப்பு குளங்களிலோ வளர்த்தால் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் குளங்களிலிருந்து தப்பித்துவிட வாய்ப்புள்ளது.

அவ்வாறு தப்பிச்செல்லும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் ஏரி, ஆறுகளில் சென்று, பிற மீன் இனங்களை அழிப்பதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை தவிர வேறு எந்த மீன்களும் பிழைக்க வாய்ப்பில்லாத நிலை உருவாகும். எனவே, தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க தடைவிதிக்கப்படுகிறது. இதை மீறி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்வளர்த்தால், மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள மீன் பண்ணையாளர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை மீன் வளத்துறையின் ஆலோசனை பெற்று வளர்க்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Tags : district ,African ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவினர் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும்