×

பாலியல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை வாலிபர் மீது போலீசில் புகார்

செய்யாறு, டிச.30: செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர், செய்யாறு சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். வெம்பாக்கம் தாலுகா கரந்தை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(25). இவரும் அதே கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ராஜ்குமார் தன்னை காதலிக்கும்படி கூறி இளம்பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும், கடந்த சில மாதங்களாக பாலியல் தொந்தரவும் செய்து வந்தாராம். இதனால் மனமுடைந்த இளம்பெண் கடந்த 27ம் தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை தூசி போலீசில் புகார் செய்தார். அதில், தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தற்கொலை செய்து கொள்ள காரணமான ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Teen ,suicide ,
× RELATED பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது