×

தாமதமாக நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பட்டினியால் வாடிய பள்ளி மாணவர்கள்: இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் சலசலப்பு

வாலாஜாபாத்: பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழாவுக்கு, அமைச்சர் 2 மணி நேரம் தாமதமாக வந்தார். இதனால், மாணவர்கள் பட்டினியுடன் கடுமையாக அவதியடைந்தனர். இதனால் அந்த விழாவில் சலசலப்பு ஏற்பட்டது. வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள நாய்க்கன் பேட்டை, தென்னேரி, ஏகனாம்பேட்டை, வாலாஜாபாத் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும்  நிகழ்ச்சி வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் கலந்து கொண்டு வாலாஜாபாத்தில் உள்ள 2 மேல்நிலைப்பள்ளிக்கு 361, நாயக்கன் பேட்டை மேல்நிலைப்பள்ளிக்கு 166, தென்னேரி மேல்நிலைப்பள்ளிக்கு 77, ஏகனாம்பேட்டை மேல்நிலைப்பள்ளிக்கு 184 என சைக்கிள்களை வழங்கினார். காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் உள்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, வாலாஜாபாத் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மதியம் 1 மணிக்கு துவங்கும் என ஆசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் அனைவரும் மதியம் 12.30 மணிக்கு பள்ளி வளாகத்தில் திரண்டனர். ஆனால், அமைச்சர் பென்ஜமின் வரவில்லை. இதனால், 2 மணிநேரமாக, மாணவர்கள் மதிய உணவு சாப்பிடாமல் பட்டினியுடன் காத்து கிடந்தனர். இதையொட்டி அவர்கள், சோர்வுடன் காணப்பட்டனர். பின்னர் அவர் வந்தவுடன், அவசர அவசரமாக நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டது. அமைச்சர் தாமதமாக வந்ததால், பிள்ளைகள் பட்டினி கிடந்ததை கண்டு, பெற்றோர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

Tags : school students ,event ,ceremony ,
× RELATED மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச்...