×

பொங்கல் உதவி தொகை வழங்கும் பணியில் அ.தி.மு.க.வினர் கலந்து கொள்ளக்கூடாது

திருப்பூர், டிச.30:  திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் அ.தி.மு.க.வினர் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அனைத்து அரசியல் கட்சியினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களுடன் ஆங்காங்கே அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாகவும், ரேஷன் கடையிலும் டோக்கன் வழங்கி வருகின்றனர்.

மேலும், தங்கள் கட்சியின் சார்பாக இந்த தொகை கொடுப்பதை போன்ற சித்திரத்தையும் உருவாக்கி வருகின்றனர். அ.தி.மு.க.வினரின் இந்தச் செயல் உள்நோக்கம் கொண்டதாகும். தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு செய்து வருகிறார்கள். மக்கள் செலுத்தும் வரிப்பணத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்குகிறது. ஆனால், இதற்கு அ.தி.மு.க.வை சார்ந்தவர்கள், அரசு ஊழியர்களுடன் வீடு வீடாக சென்றும் ரேஷன் கடைகளிலும் டோக்கன் வழங்குவது சட்ட விதி மீறல்.

எனவே, இந்த முறைகேடான செயலை அனைத்து அரசியல் கட்சிகளும் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், கலெக்டர் உடனடியாக தலையிட்டு மக்களுக்கு நிதி வழங்குவதற்கான நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்களை தவிர மற்ற யாரும் கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Tags : AIADMK ,Pongal ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...