ஊட்டி, டிச. 30: ஒன்பது மாதங்களுக்கு பின் கடந்த ஒரு வாரமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளதாலும், தொடர்ந்து வருகை காரணமாக உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கை. குறிப்பாக, புத்தாண்டு விடுமுறையின்போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்குள் வருவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. தற்போது சுற்றுலா பயணிகள் வர அனுமதி எளிமையாக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஒரு வாரமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக, அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அனைத்து சுற்றுலா தலங்களும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் களைகட்டியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறையாமல் உள்ளது. நாளை மறுநாள் புத்தாண்டு என்பதால், தொடர்ந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஒரு வாரமாக கூட்டம் குறையாமல் உள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம், சுற்றுலா பயணிகள் கூட்டத்தால், ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. அதேபோல், தொட்டபெட்டா, பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.