பந்தலூர், டிச.30: பந்தலூர் அருகே நீலகிரி தாளூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள் நெல் அறுவடை செய்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பந்தலூர் அருகே தாளூர் பகுதியில் செயல்பட்டு வரும் நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், துறை தலைவர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கல்லூரிக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் நிலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பிற்கு பிறகு நேரத்தை பயன் உள்ளதாக்கும் வகையில் இயற்கை முறையில் நெல் மற்றும் காய்கறி, பழங்கள், பல்வேறு வகையான நாற்றங்கால் உள்ளிட்டவை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி வேளாண் கிராமம் என்று பெயரிடப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட காய்கறி மற்றும் நெல் அறுவடையை நேற்று கல்லூரி செயலாளர் ராசித்கஷாலி துவக்கி வைத்து கூறுகையில்,`கொரோனா விடுமுறை காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள கந்தகசாலா, ஜோதி ஆகிய நெல் ரகங்கள் அறுவடை செய்யப்பட்டு நல்ல மகசூல் கிடைத்துள்ளது. இதை பல்வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம். தொடர்ந்து மாணவர்களுக்கு கல்லூரியில் வேளாண் சம்மந்தமாக ஒரு பாட வகுப்பையும் நடத்த உள்ளோம்’ என்றார். இந்நிகழ்ச்சியில் கல்லூயின் முன்னாள் முதல்வரும், முதன்மை நிர்வாக அலுவலருமான தொரை, மக்கள் தொடர்பு அலுவலர் உம்மர், கல்லூரி டீன் மோகன்பாபு மற்றும் பேராசிரியர்கள், துறை தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.