×

குடோன் தீ விபத்தில் 30 டன் கழிவு பஞ்சு எரிந்து சேதம்

பவானி, டிச. 30: ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகேயுள்ள ராயபாளையம், கூட்டுறவு காலனியைச் சேர்ந்தவர் ராஜா (37). இவர், சித்தோடு ராயர்பாளையம் பகுதியில் கடந்த 3 ஆண்டாக பஞ்சு குடோன் வைத்து நடத்தி வருகிறார். இங்கு திருப்பூர் மற்றும் பிற பகுதியில் இருந்து வாங்கி வரப்படும் கழிவு துணிகள் இங்கு மீண்டும் இயந்திரத்தில் அரைத்து பஞ்சாக மாற்றி அதில் இருந்து நூல் தயாரிக்கப்படுகிறது. இந்த நூல் வீடு துடைக்கும் துணி, கால் மிதியடி உள்ளிட்டவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இக்குடோனில் நேற்று தொழிலாளர்கள் 14 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, குடோனின் ஒரு பகுதியில் தீ பிடித்ததில் கரும்புகை கிளம்பியது. இதைக்கண்ட தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது.   

இது குறித்து தகவல் அறிந்த பவானி தீயணைப்பு துறையினர், நிலைய அலுவலர் (பொ) ஆறுமுகம் தலைமையில் சம்பவயிடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து, ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தலைமையில்ல மேலும் இரு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு  சுமார் 3 மணி நேரப் போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது. இதில், குடோனில் வைக்கப்பட்டிருந்த 30 டன் கழிவு துணிகள் மற்றும் பஞ்சு, இயந்திரங்கள் எரிந்து சேதமாகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை