×

ரூ.38 கோடி நிலுவைத்தொகை செலுத்தாததால் திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டலை கையகப்படுத்தியது தமிழக அரசு: 30 ஆண்டுகால குத்தகை முடிவடைந்த நிலையில் நடவடிக்கை

திருச்சி: ரூ.38.85 கோடி குத்தகை நிலுவைத்தொகை செலுத்தாததால் திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நேற்று கையகப்படுத்தி உள்ளது. திருச்சி மாநகரம் கொட்டப்பட்டு அருகே ரேஸ் கோர்ஸ் சாலையில் எஸ்.ஆர்.எம். ஓட்டல் உள்ளது. 4.70 ஏக்கர் பரப்பளவில் ஓட்டல் அமைந்துள்ள அந்த இடம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமானது. அந்த இடத்தை கடந்த 1994ம் ஆண்டு 30 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் எஸ்.ஆர்.எம் நிறுவனத்திற்கு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் வழங்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகால குத்தகை தொகையாக ரூ.47.93 ேகாடி நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 30 ஆண்டுகளில் அந்த நிறுவனம் ரூ.9.08 கோடி மட்டுமே செலுத்தியது.

மீதமுள்ள ரூ.38.85 கோடி தொகையை செலுத்தாமல் ஓட்டல் நடத்தப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 13ம்தேதி 30 ஆண்டு கால குத்தகை காலம் முடிவடைந்தது. அன்றைய தினம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் ஓட்டலை கையகப்படுத்த வந்த போது, எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தினரும், ஐ.ஜே.கே. கட்சியினரும் வாக்குவாதம் செய்தனர். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் ஹோட்டலை கையகப்படுத்த தடை விதித்த உயர்நீதிமன்றம், எஸ்.ஆர்.எம் நிர்வாகத்திற்கு காலக்கெடு விதித்தது. அந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைமை அதிகாரி வெங்கடேசன், திருச்சி மண்டல மேலாளர் பிரபு தாஸ் தலைமையில் எஸ்.ஆர்.எம். ஓட்டல் நேற்று கையகப்படுத்தப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஓட்டலுக்கு மேலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு சுற்றுலா துறையை சார்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, ஓட்டலின் முன் பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் தங்களின் லோகோவை ஒட்டினர். முக்கியமாக, ஓட்டலில் தங்கி உள்ள விருந்தினர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஓட்டல் தொடர்ந்து இயங்கி வருகிறது. அலுவல் ரீதியாக முழுமையாக ஓட்டலை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு பணியாற்றுபவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாதபடி தொடர்ச்சியாக அவர்களை பணியில் ஈடுபட சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினர் அறிவுறுத்தினர்.

இந்த நிலையில், எஸ்.ஆர்.எம் நிர்வாகத்தின் சார்பில் கால அவகாசம் கேட்டு அவசர அவசரமாக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உத்தரவு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த உத்தரவு எஸ்.ஆர்.எம் நிர்வாகத்திற்கு ஆதரவாக வரும்பட்சத்தில் மீண்டும் ஓட்டல் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படலாம் என கூறப்படுகிறது. குத்தகை நிலுவை தொகை செலுத்தாத காரணத்தால் எஸ்ஆர்எம் ஓட்டலை அரசு கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu Government ,Trichi SRM ,Trichchi ,S. R. ,Tamil Nadu Tourism Development Corporation ,Trichy ,R. ,M. ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து