சென்னை: வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வை செய்ய நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பொறுப்பு அலுவலர்களாக 7 தலைமைப் பொறியாளர்கள் நியமித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை வெளியிட்ட அறிக்கை: கடந்த 13ம் தேதி பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் தலைமையில், நெடுஞ்சாலைத்துறையின் பணிகளின் முன்னேற்றம் குறித்து நடந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாட்டில் எதிர்வரும் வடகிழக்குப் பருவமழையை கருத்தில் கொண்டு, வெள்ள நிலைமையை சமாளிக்க 10 நெடுஞ்சாலை வட்டங்களில் உள்ள சாலை மற்றும் பாலங்களை திறம்பட கண்காணித்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சீரமைப்புப் பணிகள் ஆகியவற்றை துரிதமாக மேற்கொள்வதற்கு தலைமைப் பொறியாளர் நிலையில், 7 தலைமைப் பொறியாளர்கள் வெள்ள கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து, அரசு நேற்று ஆணை பிறப்பித்துள்ளது.
சென்னை வட்டத்திற்கு தலைமைப் பொறியாளர் சத்தியபிரகாஷ், விழுப்புரம் வட்டத்திற்கு தலைமைப் பொறியாளர் பன்னீர்செல்வம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி வட்டத்திற்கு தலைமைப் பொறியாளர் கிருஷ்ணசாமி, மதுரை வட்டத்திற்கு தலைமைப் பொறியாளர் சரவணன், திருநெல்வேலி வட்டத்திற்கு தலைமைப் பொறியாளர் ஜவஹர் முத்துராஜ், திருவண்ணாமலை மற்றும் சேலம் வட்டத்திற்கு தலைமைப் பொறியாளர் தேவராஜ், திருப்பூர் மற்றும் கோயம் புத்தூர் வட்டத்திற்கு தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பருவ மழையின்போது நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதேனும் தேவைப்பட்டாலும், மழை நின்ற பிறகு சீரமைப்புப் பணிகள் ஏதேனும் தேவைப்பட்டாலும், அந்தந்த வட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தலைமைப் பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு நெடுஞ்சாலை துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
