×

திருநின்றவூர் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: தம்பதி, குழந்தைகளுடன் உயிர் தப்பினர்

திருநின்றவூர்: திருநின்றவூர்- பெரியபாளையம் நெடுஞ்சாலையில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது.  தம்பதியினர், இரண்டு குழந்தைகளுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திண்டிவனம், சரவணப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (34).  தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சசிகலா (28). தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த 3 தினங்களுக்கு முன்பு பிரகாஷ், தனது மனைவி குழந்தைகளுடன் காரில் திருவள்ளூர் அருகே பெரியபாளையத்தில் வசிக்கும் சகோதரி வீட்டுக்கு வந்தார்.

இந்நிலையில் பிரகாஷ் குடும்பத்தினருடன் காரில் திண்டிவனத்திற்கு நேற்று முன்தினம் புறப்பட்டார். இவர், ஓட்டி வந்த கார், திருநின்றவூர்- பெரியபாளையம் நெடுஞ்சாலை, பாக்கம் செக்போஸ்ட் அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது, காரின் முன்பகுதியில் இன்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனையடுத்து, சுதாரித்துக்கொண்ட பிரகாஷ், காரை சாலை ஓரம் நிறுத்தினார். பின்னர், அவர் சசிகலா, இரு குழந்தைகளுடன் காரைவிட்டு கீழே இறங்கி ஓடினார். அதன்பிறகு கார் மள மளவென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றிஅணைக்க முயன்றனர் முடியவில்லை.

தகவலறிந்த ஆவடி தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், அவர்கள் தண்ணீர் பீச்சி அடித்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். இதில், கார் முழுவதும் எரிந்து எலும்புக் கூடானது. மேலும் காருக்குள் இருந்த லேப்டாப், செல்போன்கள், கைப்பை ஆகியவையும் எரிந்து சேதமானது. இதுகுறித்து பிரகாஷ் முத்தாப்புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும், கார் தீப்பற்றி எரிந்தது மின் கசிவு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Tags : children ,Thiruninravur ,Nadu Road ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...