×

மாயமான மனைவியை தேடியவர் மர்மச்சாவு போடி அருகே பரபரப்பு

போடி, டிச. 29: போடி அருகே மாயமான மனைவியை தேடி சென்ற கணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போடி அருகே காமகளம் முனீஸ்வரன் கோயில் சாலை மேலபரவு பகுதியை சேர்ந்தவர் பூவானம் (26). கூலி தொழிலாளி. இவரது மனைவி முருகேஸ்வரி (25), சற்று மனநலம் பாதித்தவர் என கூறப்படுகிறது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் வெளியே சென்ற முருகேஸ்வரி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. இது குறித்து பூவானம் கொடுத்த புகாரின் பேரில் குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று முன்தினம் மனைவியை தேடி சென்ற பூவானம் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று காலை கரட்டுபட்டி அருகே மங்கம்மாள் சாலையில் பற்கள் உடைந்து வாயில் ரத்தத்துடன் பூவானம் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போடி தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர். பூவானம் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags : Marmachavu Bodi ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு