வத்தலக்குண்டு, டிச. 29: நிலக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் வாடகை வீட்டில் குடியிருக்கும் வசதியற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், ஒன்றிய தலைவர் சசிக்குமார் தலைமையில் 100க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நிலக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் பஞ்சு, மாவட்ட செயலாளர் பகத்சிங், சிஐடியு தொழில் சங்க பொறுப்பாளர் காசிமாயன் முன்னிலை வகித்தனர். 150க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி, ஜன.31ம் தேதிக்குள் வீடற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.