அவிநாசி,டிச.29: சிப்காட் தொழிற்பேட்டை தத்தனூரில் வராது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு பெருமாநல்லூரில் பேசினார்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு கோவையிலிருந்து பெருமாநல்லூர் வழியாக சேலம் நோக்கி சென்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று பெருமாநல்லூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் பூங்கொத்து கொடுத்து தமிழக முதல்வரை வரவேற்றார். அப்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சிப்காட் தொழிற்பேட்டை தத்தனூரில் வராது. திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்காக, ரூ.992 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக அமோகமாக வெற்றிபெறும். இவ்வாறு தமிழக முதல்வர் பேசினார்.முன்னதாக திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன்,எம்எல்ஏக்கள் விஜயகுமார்(திருப்பூர் வடக்கு), குணசேகரன்(திருப்பூர் தெற்கு), முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் எஸ்.பி. திஷாமிட்டல் ஆகியோர் முதல்வரை வரவேற்றனர்.