சென்னை: உயர் நீதிமன்றம் அருகே, கடந்த 7ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காரில் சென்றபோது, முன்னால் மொபட்டில் சென்ற வழக்கறிஞர் ராஜிவ்காந்தி மீது உரசியதாக கூறப்படுகிறது. இதனால், வழக்கறிஞர் ராஜிவ்காந்தி, மொபட்டை சாலையிலேயே நிறுத்திவிட்டு, காரில் இருந்த திருமாவளவனை நோக்கி, ஆவேசமாக பேசியபடி சென்றார். அப்போது தொண்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். அவர் ஆவேசமாக பேசியதால், விசிக வழக்கறிஞர்கள் ராஜிவ் காந்தியை தாக்கினர்.
இதுதொடர்பான வீடியோ வைரலானது. இது தொடர்பாக விசிக தரப்பில் வழக்கறிஞர் பார்வேந்தன் அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி மீது ஒருவரை தவறாக தடுத்து நிறுத்தியது, மிரட்டல், அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் அவமதிப்பு ஆகிய 3 பிரிவுகளில் எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராஜிவ்காந்தி அளித்த புகாரின் பேரில், விசிகவினர் மீது காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல் என 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
