×

மன்னார்குடி அருகே ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சிலிண்டர்கள் திருடியவர் கைது


மன்னார்குடி, டிச.29: மன்னார்குடி அருகே அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மூன்று கேஸ் சிலிண்டர்களை திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த மேலவாசல் குமரபுரம் பகுதியில் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் சிவசுப்பிரமணியன் (57) என்பவர் முதல்வராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், ஆசிரியர் பயிற்சி பள்ளியின் சமையல் அறையில் இருந்த கேஸ்சுடன் கூடிய 3 சிலிண்டர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ம் தேதியன்று திருடு போனது. இதுகுறித்து முதல்வர் சிவசுப்பிரமணியன் ஆகஸ்ட் 31ம் தேதி மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடிக்க குற்றப்பிரிவு எஸ்ஐ முருகானந்தம், எஸ்எஸ்ஐ சதாசிவம் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மேலவாசல் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்ததில், மன்னார்குடி அருகே உள்ள மேலவாசல் லட்சுமி நகரை சேர்ந்த சுரேஷ்குமார் (36) என்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி சமையல் அறையில் இருந்து 3 கேஸ் சிலிண்டர்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ்குமாரை கைது செய்த போலீசார் அவரை மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் நன்னிலம் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags : teacher training institute ,Mannargudi ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...