×

பாஜ மிரட்டலை தட்டிகேட்க அதிமுகவில் ஆளில்லை: காங்கிரஸ் தேசிய செயலாளர் விஸ்வநாதன் பேட்டி

செங்கல்பட்டு: அதிமுகவில் பாஜவின் மிரட்டலை தட்டிகேட்க யாரும் இல்லை என, காங்கிரஸ் தேசிய செயலாளரும், முன்னாள் எம்பியுமான விஸ்வநாதன் தெரிவித்தார். காஞ்சிபுரம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. விஸ்வநாதனுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் நேற்று செங்கல்பட்டுக்கு வந்தார். அவருக்கு செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து வீரவாள் கொடுத்து வரவேற்றனர். அவர்  செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ராட்டிணகிணறு பகுதிகளில் உள்ள காந்தி, ராஜீவ்காந்தி, காமராஜர், அம்பேத்கர், பெரியார் ஆகியோர் சிலைகளுக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் விஸ்வநாதன் கூறியது: ‘‘காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராகவும், கேரள மாநில தேர்தல் பொறுப்பாளராகவும் என்னை நியமித்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வருகிற சட்டமன்ற தேர்தலில், திமுகவோடு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி தொடரும். 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றி பெறும்.

அதற்காக காங்கிரஸ் பேரியக்கம் அயராது பாடுபடும். மோடியை எதிர்க்கக்கூடிய ஒரே தலைவராக திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும்தான் உள்ளார். அதிமுகவில் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜதான் முடிவு செய்யும் என்ற பாஜ மிரட்டலை தட்டிகேட்க அதிமுகவில் ஆள் இல்லை. எத்தனை தடைகளை போட்டாலும், தமிழகத்தில் ஸ்டாலின் முதலவராக அமர்வதை யாராலும் தடுக்கமுடியாது.’’ இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு நகர காங்கிரஸ் தலைவர் பாஸ்கர், இளைஞர் அணித்தலைவர் பாலா, மாவட்ட நிர்வாகிகள் குமரவேல், ரியாஸ், ஜெயராமன், சுகுமார், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,Viswanathan ,no one ,BJP ,Congress National ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...