×

ரேஷன் ஊழியரிடமிருந்து பொங்கல் பரிசுத்தொகை டோக்கன்கள் பறிப்பு: அதிமுக நிர்வாகியால் பரபரப்பு

பெரியகுளம், டிச. 28: பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 2500 ரூபாய் மற்றும் பொங்கல் பொருட்களை வழங்குவதற்கு நியாய விலை கடை ஊழியர்களால் டோக்கன் வழங்கப்பட்டது. அப்போது அப்பகுதியின் அதிமுக பொறுப்பாளரான சந்தோசம், நியாய விலைக்கடை ஊழியரிடம் இருந்து டோக்கன்களை பறித்தார்.`` அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் தான் வழங்க வேண்டும் என்றும், அதிமுக நிர்வாகிகள் இல்லாமல் வழங்கக்கூடாது’’ என்று சொல்லி டோக்கன்கள் அனைத்தையும் தன் வசப்படுத்தி வாங்கிகொண்டார்.

இதனால் ஆத்திரம் கொண்ட அப்பகுதி மக்கள் ரேஷன் கடை ஊழியரை முற்றுகையிட்டு அரசு வழங்கக்கூடிய பொங்கல் பரிசு தொகைக்கான டோக்கன்களை நியாய விலை கடை ஊழியர் தான் வழங்க வேண்டும் என்றும், அதிமுகவினர் எப்படி வழங்கலாம் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. தகவல் அறிந்து வந்த பெரியகுளம் வடகரை காவல்துறையினர் அதிமுக நிர்வாகி வைத்திருந்த டோக்கன்களை மீட்டு பொதுமக்களிடமிருந்து நியாயவிலைக் கடை ஊழியரை மீட்டு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
மேலும் நியாய விலைக்கடை ஊழியர் தான் பொங்கல் பொருட்களுக்கான டோக்கனை வழங்குவார் என அப்பகுதி மக்களிடம் கூறி காவல்துறையினர் சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : ration staff ,executive ,AIADMK ,
× RELATED பாஜ நிர்வாகி மண்டை உடைப்பு; அதிமுக பிரமுகர் கைது