நெல்லை, டிச. 28: சமூக நீதியை காக்க ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என நெல்லையில் நடந்த பெரியார் சமூக நீதி நூற்றாண்டு மாநாட்டில் காணொலி காட்சி மூலம் தி.க. தலைவர் கி. வீரமணி பேசினார். பாளை நூற்றாண்டு மண்டபத்தில் பெரியார் சமூக நீதி நூற்றாண்டு மாநாடு நேற்று காலையில் தொடங்கியது. தி.க. தலைவர் கி. வீரமணி காணொலி காட்சி மூலம் பேசியதாவது: சமூக நீதி தான் பெரியாரின் முதல் குறிக்கோளாக இருந்து வந்தது. இதற்காகத் தான் நீதிக்கட்சி துவக்கப்பட்டது. மக்களுக்கான உரிமைகள் குறித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஒடுக்கப்பட்டவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. இதனை பெற்றுத் தரவே பெரியார் சமூக நீதிக்காக பல போராட்டங்களை நடத்தியுள்ளார். சமூக நீதி என்பது எல்லாமே எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே. அதுவே பெரியாரின் நோக்கமாகும். சமூக நீதி மீது கை வைப்பவர்கள் தமிழகத்தில் காலூன்ற முடியாது. சமூக நீதி குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும். சமூகநீதியை பாதுகாக்கவும், பொதுமக்கள், இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இத்தகைய நிகழ்ச்சி நெல்லையில் நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சமூக நீதியை காக்க ஸ்டாலினை முதல்வராக வேண்டும்.