திருப்பரங்குன்றம், டிச. 28: திருப்பரங்குன்றம் தொகுதி நல்லூர் கிராமத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. டாக்டர் சரவணன் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் வேட்டையன், ஒன்றியக் கவுன்சிலர்கள் களஞ்சியம், சுப்புலட்சுமி, நிர்வாகிகள் மகாலிங்கம், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசுகையில், ‘நிலையூர்-கம்பிக்குடி கால்வாயில் நிரந்தரமாக தண்ணீர் கொண்டு வர, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால், 20க்கும் மேற்பட்ட கண்மாய்களில் நீர் நிரம்பும்; நிலத்தடி நீரும் உயரும். எனவே, இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும், அரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் வருவதில்லை. இதனால், நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்’ என்றனர். ஒன்றியச் சேர்மன் வேட்டையன் கூறுகையில், ‘திருப்பரங்குன்றம் திமுக தொகுதி என்பதால், அதிமுக அரசு புறக்கணிக்கிறது. இந்த தொகுதிக்குள் எந்த திட்டங்களையும் செயல்படுத்த விடுவதில்லை’ என குற்றம்சாட்டினார்.
இதே போல் மாநகராட்சிக்கு உட்பட்ட திருநகர் பகுதியில் பகுதி செயலாளர் உசிலை சிவா, வட்ட செயலாளர்கள் சுந்தர்ராஜன், காசிமாயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இப்பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் தேவையை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.