வேட்டவலம், டிச.28: வேட்டவலம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலய ஆண்டுப் பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேலூர் மறை மாவட்ட பரிபாலகர் ஜான்ராபர்ட் தலைமை தாங்கி கொடியேற்றினார். தொடர்ந்து கூட்டு திருப்பலியில் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா அடுத்த மாதம் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், வேட்டவலம் மலையில் கேட்டவரம் தரும் புனித சூசையப்பர் திருத்தல ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை நடந்தது. ஜனவரி 1ம் தேதி நற்கருணை பெருவிழா, 2ம் தேதி கேட்டவரம் தரும் புனித சூசையப்பர் தேர்பவனி, 3ம் தேதி புனித மரியாவின் தேர்பவனி, 4ம் தேதி திருப்பலியுடன் கொடியிறக்கம் செய்து ஆண்டுப் பெருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை வேட்டவலம் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர். மேலும், பெருவிழாவை முன்னிட்டு புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயம், புனித சூசையப்பர் திருத்தலம் ஆகியவை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.