×

நாகர்கோவிலில் கஞ்சா விற்பனை கும்பலை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது 2 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்

நாகர்கோவில், டிச.28 : வடசேரி சப் இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் தலைமையில் நேற்று முன் தினம் மாலை பார்வதிபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பைக்கில் 2 பேர் நின்று கொண்டு இருந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். இதில் அவர்கள் 2 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதை அந்த பகுதியில் உள்ள ஒரு கும்பலுக்கு விற்பனை செய்வதற்காக நின்று கொண்டு இருந்தனர். இதையடுத்து இவர்கள் இருவரையும் வடசேரி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் ஒருவன், குமரி மாவட்டம் முளகுமூடு கூட்டமாவு பகுதியை சேர்ந்த கிங்ஸ்லி (36), மற்றொருவன் இடுக்கி வண்டி பெரியார் பகுதியை சேர்ந்த ஜெனிட்டர் (31) என்பது தெரிய வந்தது. இதில் கிங்ஸ்லி தற்போது, தேனி பெரியகுளத்தில் வசிக்கிறார். அங்கிருந்து தான் கஞ்சா கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. ஜெனிட்டர், தற்போது அழகியபாண்டிபுரத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சா மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர். பின்னர்,  இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : youths ,Nagercoil ,
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்