திருத்துறைப்பூண்டி, டிச.28: உலக புகழ்பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்தது. இதில் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கீராலத்தூர் ஊராட்சியில் புகழ்பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சனிக்கிழமைகள் தோறும் தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி நேற்று (27ம் தேதி) காலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
இதையொட்டி சுவாமிக்கும் பொங்கு சனீஸ்வரர் பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பிறகு காலை 7 மணிக்கு மேல் பக்தர்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழாவில் ஆர்டிஓ புண்ணியக்கோட்டி, தாசில்தார் ஜெகதீசன், செயல் அலுவலர் சுரேந்தர். ஒன்றிய குழு தலைவர் கனியமுதா ரவி, ஊராட்சி தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு மன்னார்குடி - திருவாரூர்-திருத்துறைப்பூண்டி வழித்தடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏடிஎஸ்பி கார்த்தி மேற்பார்வையில் டிஎஸ்பிகள் பழனிச்சாமி, தேன்மொழிவேல், சதீஷ்குமார், பயிற்சி டிஎஸ்பி பிரபு ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மகாதேவன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுரேந்தர் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர். நீடாமங்கலம்: நீடாமங்கலம் காசி விசுவநாதர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அதிகாலை அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டது. சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ேதொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதேபோல் நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோயில், பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.