×

பைக் மோதி பாட்டி, பேத்தி பலி: வந்தவாசியில் பரிதாபம்

வந்தவாசி, டிச.27: வந்தவாசியில் சாலையோரம் நடந்து சென்றபோது பைக் ேமாதியதில் பாட்டி, பேத்தி பரிதாபமாக பலியாகினர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வாணியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நவாப்ஜான் மனைவி அலீமா(70). இவரது மகள் வழி பேத்தி பரிதா(36). இவர்கள் இருவரும் நேற்று காலை 8 மணியளவில் வெண்குன்றம் நெடுஞ்சாலை பயணியர் விடுதி அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, வெண்குன்றம் கிராமத்தை சேர்ந்த நாகமணி மகன் அரவிந்த்(18) என்பவர் ஓட்டிவந்த பைக், இவர்கள் மீது மோதியது. இதில் அலீமா, பரிதா ஆகிய 2 பேரும் அருகில் உள்ள வயல்வெளியில் தூக்கி வீசப்பட்டனர். பைக்கை ஓட்டிவந்த அரவிந்தும் பைக்குடன் வயல்வெளியில் இறங்கினார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பரிதா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், படுகாயங்களுடன் இருந்த அலீமா, அரவிந்தை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அலீமாவும் பரிதாபமாக இறந்தார். அரவிந்த் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இன்ஸ்பெக்டர் விஜயன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

சென்னையில் வசித்து வந்த பரிதா, கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாததால் தனது கணவர் அஸ்மத்துல்லா மற்றும் 3 குழந்தைகளுடன் வந்தவாசிக்கு வந்துவிட்டார். பின்னர், காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், இந்த அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது. பைக் மோதி பாட்டி, பேத்தி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : granddaughter ,Vandavasi ,
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு